Wednesday, August 23, 2006

கல்வெட்டுக்கள்


கல்வெட்டுக்கள்
-----------------------

பாழான பழைய தியேட்டர்
சுவர்கள் புதுப்பிக்கும் போதும்

பொதுக்க் கழிப்பிடம் எப்போதாவது
பெயிண்ட்டடிக்கும் போதும்

மந்திரி வருவதறிந்து, அவசரமாய் ரயில்கள்
அழகுபடும் போதும்

கட்டுப்பட்டுக் காத்திருந்த சாலயோர மரங்கள்
வெட்டப்படும் போதும்

சரிந்து ஆடும் கல்லூரி மேசைகள்
சரிபார்க்கப்படும் போதும்

சிதைவு பலபட்ட ஹாஸ்டல் கதவுகள்
அலங்கரிக்கும் போதும்

பள்ளியோர கள்ளி மரங்கள்
களையெடுக்கப்படும் போதும்...

காணாமல் போகும்
சில காதல் கல்வெட்டுக்கள் !!

-2003


நெடுங்கேள்வி


நிலவின் பின் பக்கத்தை
ஏன் யாரும் ரசிப்பதே இல்லை ?

காதலியின் கோபத்தை
ஏன் யாரும் சகிப்பதில்லை ?

அலாரம் அடிக்கும் முன்னே
அம்மா ஏன் எழுந்து கொள்கிறாள் ?

பள்ளிக்கூட கடைசி மணி
ஏன் மிக வேறுமையாய் உள்ளது ?

கல்லறைப் பூக்கள்
ஏன் சிரிப்பை மறந்து விடுகிறன ?

கடற்கரை காதலர்களுக்கு
ஏன் மணல் சுடுவதே இல்லை ?

சண்டையிட்ட நண்பர்கள்
ஏன் மண்ணிப்பு கேட்பதே இல்லை ?

பொய் சொல்லும் கவிஞனை
அவன் அம்மா தண்டித்திருப்பாளா ?

கழுதை ஏன் பாடுவதே இல்லை ?

பாரதி ஏன் இறந்து போனான் ?

அடுத்த ஊருக்கு வழியனுப்பினாளும்
ஏன் அழுகிறாள் தாய் ?

ஓளிந்து கோண்டே வந்த பஸ் பயண பெண்மணி
இறங்கியவுடன் ஏன் பார்த்துப் புன்னகைக்க வேண்டும் ?

'ஔவை' -யை ஏன்
ஒ-ள-வை என்று நாம் படிப்பதில்லை ?

காதலி ஏன் கண்பார்த்து அழுவதில்லை ?

கண்விழிக்கும் போது மட்டும்
ஏன் இரவு நீளமாய் உள்ளது ?

அலாவுதீனின் விளக்கை
இப்போது யார் வைத்திருக்கிறார்கள் ?

நாம் ஏன் இன்னும்
கேள்விகேட்டுக்கோண்டெ இருக்கிறொம் ?

ஆமாம்...
நீங்கள் ஏன் இன்னும் கவிதை படித்துக்கொண்டே இருக்கிறீர்கள் ? !

-2005

புரியாவிடை

எல்லா ஹோட்டலிலும்
தொலைந்துபோன தன் படிப்பை
தொடைத்து எறிகிறான் ஒரு சிறுவன்


'என் மகனை எந்த கல்லூரியில் சேர்ப்பது ?'
பழைய மாணவனிடம் பாடம் கேட்கிறார்
வாத்தியார்

வளர்ந்த பிறகு
பிடித்து விடுகிறது
வெறுத்த பள்ளியும்
சபித்த டீச்சர்களும்

பிரிவின் நினைவில்
ரசித்து சிரிக்கிறோம்
காதலியின் கோபத்தை

கவிதை வரி முண்டியடித்துக்கொண்டு
வரும் வேளையில்...

இதோ.!
முடிந்து போகிறது பக்கம் !!

-2005